Breaking

Tuesday 6 February 2018

இங்குள்ள மக்களில் ஒருவராக கலந்துவிட விரும்புகிறேன்.



எனது தாத்தா அணைகட்டி இங்குள்ள மக்களில் ஒருவராகி விட்டார். அதுபோல் நானும் சேவையாற்றி, இங்குள்ள மக்களில் ஒருவராக கலந்துவிட விரும்புகிறேன். இங்குள்ள பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய ஆசைப்படுகிறேன். அடுத்த ஆண்டு மீண்டும் இங்கு வருவேன்.
‘கர்னல் ஜான் பென்னிகுவிக் இன்னொரு நாட்டை சேர்ந்தவர். அவர் இறந்தும் நூறாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், அவர் மீது இன்றும் தமிழக மக்கள் வைத்திருக்கும் பாசம் என்னை மெய்சிலிர்க்கவைத்தது. கடவுளுக்கு நிகராக பென்னிகுவிக்கை வழிபடுவதும், போற்றுவதும் என்னை பிரமிப்பிற்குள்ளாக்குகிறது. என் தாத்தா இறந்து போனாலும் அவர் தமிழக மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்துப்பார்த்தபோது நான் கண்கலங்கி விட்டேன். இவ்வளவு நன்றி மிகுந்த மக்கள் உலகத்தில் வேறு எங்கும் இருக்க வாய்ப்பில்லை..’ என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பேச வார்த்தைகள் கிடைக்காமல் சற்று தடுமாறுகிறார், டாக்டர் டயானா ஜிப். இவர் பென்னிகுவிக்கின் பேத்தி.
பென்னிகுவிக் இங்கிலாந்தை சேர்ந்தவர். தனது சொத்து களை விற்று முல்லைப்பெரியாறு அணையை கட்டிய நாயகன். அதுதான் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீர் ஆதாரம். அதனால் அங்குள்ள மக்கள், ‘நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்’ என்று பென்னி குவிக் புகழ்பாடிக்கொண் டிருக்கிறார்கள். தனது 70-வது வயதில் (1911-ல்) சொந்த நாடு சென்ற அவர், லண்டனில் காலமாகிவிட்டார். அவரது அண்ணன் சார்லஸ். அவரது மகள் வழி பேத்திதான் டாக்டர் டயானா ஜிப்.
தனது தாத்தா பென்னிகுவிக்கின் புகழை அறிய டயானா ஜிப் தமிழகம் வந்திருந்தார். அவருடன், லண்டனில் கேம்பர்லி என்ற இடத்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் கல்லறை அமைந்துள்ள தேவாலயத்தின் செயலாளர் சூசன்பெரோ, தேவாலய அமைச்சர் சரோன்பில்லி, ஊடக ஆய்வாளர் ஜெய்னி மோரி ஆகியோரும் வந்திருந்தனர். பென்னிகுவிக் குறித்தும், தமிழக நீர்நிலைகளின் நிலைமை குறித்தும் ஆவணப்படம் எடுத்து வரும் உத்தமபாளையத்தை சேர்ந்த சந்தனபீர்ஒலி என்பவரின் முயற்சியால் அவர்கள் அனைவரும் தேனிக்கு வந்தனர்.
தமிழக மக்களின் அன்பை பெற்ற உற்சாகத்தில், மகிழ்ந்து, நெகிழ்ந்து, பிரியாவிடைபெற்று, டாக்டர் டயானா ஜிப் உள்ளிட்ட 4 பேரும் லண்டனுக்கு திரும்பியுள்ளனர். டாக்டர் டயானா ஜிப் தனது தமிழக அனுபவங்களை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் உங்களுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
‘‘இல்லை. இங்கு கிடைத்த வரவேற்பு எனக்கு பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் 
ஏற்படுத்தியிருக்கிறது. என் தாத்தாவை இங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராக வழிபடுவதை நினைத்துப்பார்க்கிறேன். அதனால் ஏற்படும் உணர்ச்சிகளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. கண் கலங்கி விட்டேன். இங்குள்ள மக்களின் மூதாதையர் என் தாத்தாவிடம் காட்டிய அதே அன்பை, இந்த தலைமுறை மக்கள் என்னிடம் காட்டினார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அன்பாக பழகினார்கள். பெண்களும், குழந்தைகளும் எனக்கு ஆரத்தி எடுத்து, என் நெற்றியில் குங்குமம் பூசி விட்டனர். அது எனக்கு புதுஅனுபவமாக இருந்தது. அனைவரும் ஒருங்கிணைந்து பொங்கலிட்டனர். அந்த பொங்கலை ருசித்து சாப்பிட்டேன். அதில் அவர்களது அன்பும் கலந்திருந்ததால் அதிக தித்திப்பு தந்தது. நானும் இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’
உங்கள் தாத்தா கட்டிய முல்லைப்பெரியாறு அணையை தொட்டுப் பார்த்தீர்கள். படகில் அதன் உள்ளே பயணமும் செய்தீர்கள். அப்போது நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டீர்கள் அல்லவா?
‘‘ஆமாம். அப்போது என் தாத்தாவை நினைத்து சிலிர்த்தேன். படகுப் பயணம் பிரமிப்பாக இருந்தது. அடர்ந்த வனம், உயர்ந்த மலைகள், அவற்றுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரில் படகு மிதந்து சென்றது. இதோ வந்து விடும், அதோ வந்து விடும் என சுமார் 40 நிமிடங்கள் பயணம் செய்தும் அணை கண்ணில் படவில்லை. 


நான் பிரமிப்புடன் மலைகளையும், நீரையும் ரசித்தபடி சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று கண்ணுக்கு முன்னால் பிரமாண்டமாய் அணை நிமிர்ந்து, விரிந்து கிடப்பதை பார்த்து வியந்தேன். இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத முந்தைய காலத்தில் எப்படி இவ்வளவு பிரமாண்டமாய் கட்டமுடிந்தது? எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த அணையை கட்டி இருப்பார்கள்? அதற்காக இந்த மக்கள் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பார்கள்? என்றெல்லாம் எனக்குள் நானே கேள்விகள் கேட்டு வியந்தேன். அணையில் முதல் அடி எடுத்து வைத்தபோது, என்னை அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன்’’
அந்த சில வினாடிகளில் பென்னிகுவிக் பற்றி உங்கள் மனது என்ன சொன்னது?
‘‘பென்னி குவிக் வம்சாவழியில் பிறந்தது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று நினைத்தேன். இயற்கை பேரிடர்களும், வனவிலங்குகளின் அச்சுறுத்தலும் நிறைந்த இந்த பகுதியில் இவ்வளவு பெரிய அணையை கட்டுவதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்று வியந்தேன். அப்போது என் தாத்தா மீதான மரியாதை ஆயிரம் மடங்கு உயர்ந்தது..’’
அணையின் அழகு உங்களை எப்படி ஈர்த்தது?
‘‘அணை கம்பீரமாகவும், அழகாகவும், ரம்மியமாகவும் இருந்தது. அணையில் நடந்து செல்லும் போது அடித்த குளிர் காற்றும், மென்மையான வெயிலும் எனக்குள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அணை கட்டுமான பணியின்போது உயிர் இழந்தவர்களுக்காக அங்கே கல்லறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கல்லறைகளில் தூங்குபவர்களின் தியாகத்தை எண்ணிப்பார்த்தேன். அவர்களெல்லாம் என் தாத்தாவிற்கு தோள்கொடுத்தவர்கள். அவர்களின் ஆன்மாவுக்காக சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தேன். இப்படி ஒரு அணையை நான் இதுவரை பார்த்தது இல்லை. இதற்கான அனுமதி கொடுத்த இருமாநில அரசுகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இந்த அனுபவம் என் உயிரில் கலந்த உணர்வாகும்’’
நீங்கள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளையும் பார்த்து ரசித்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
‘‘கலைகளை பார்த்து, ரசித்து மகிழ்ந்தேன். உங்கள் கலைகள் வித்தியாசமானது. வியப்பை தந்தது. அவைகளில் சில அழிந்து வருவதாக கூறினார்கள். கலைஞர்கள், கலைகளை பாதுகாக்க வேண்டும். அந்த கலைஞர்களை மக் களாகிய நாம் பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறை களுக்கும் கலைகளை கற்றுக் கொடுக்கும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’
அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
‘‘இந்த அணை மக்களுக்கானது. இதன் முழு பலனும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான முயற்சிகளை இருமாநில அரசுகளும் செய்வார்கள் என நம்புகிறேன். நான் தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வழியில் பல காட்சிகளை பார்த்தேன். நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் இருந்தன. சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுக் கிடந்தன. குப்பைகள் அவ்வாறு கொட்டப்படுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். நாம் வாழும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். அணை கட்டப்பட்டதன் நோக்கமே மக்கள் நலமோடு வாழ வேண்டும் என்பது தான். எனவே, நீர்நிலைகளை பாதுகாத்து அணையின் பலனை தொடர்ந்து அனுபவிக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்’’
மீண்டும் தமிழக மக்களை சந்திக்க வருவீர்களா?
‘‘இங்கு எனக்கு கிடைத்த அனுபவங்கள் மீண்டும் நான் தமிழகத்திற்கு வரவேண்டும் என்ற ஆசையை தூண்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு என் குடும்பத்தில் உள்ளவர்களில் மேலும் பலரையும் இங்கு அழைத்துவருவேன். எனது தாத்தா அணைகட்டி இங்குள்ள மக்களில் ஒருவராகிவிட்டார். அதுபோல் நானும் சேவையாற்றி, இங்குள்ள மக்களில் ஒருவராக கலந்துவிட விரும்புகிறேன். இங்குள்ள பெண்கள், குழந்தை களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய ஆசைப் படுகிறேன். நான் டாக்டர் என்பதால், எனது நண்பர்கள் மற்றும் லண்டனில் உள்ள டாக்டர்களையும் ஒருங்கிணைத்து இப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவேன். அதன் மூலம் இந்த மக்களுக்கும் எங்கள் குடும்பத்துக்குமான அன்பு தொடரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்’’
பென்னிகுவிக் குடும்பத்துக்கும், தமிழகத்துக்குமான உறவுப்பாலம் நீளமானது.. அணைபோல பலமானது.. பலனுள்ளது..!

1 comment:

Pages